71-ஆவது சுதந்திர தினத்தையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்மைதானத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடையாததால் சுதந்திர தின நிகழ்ச்சிகள் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுமென மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் காலை 10 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைக்கும் ஆட்சியர், விழாவுக்கு வரும் தியாகிகளை கௌரவித்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். உதகையில் தற்போது பரவலாக தூறல் மழை பெய்து வரும் நிலையில் இம்மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் தாற்காலிக கூரைகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளன. சுதந்திர தினக் கொண்டாட்டங்களையொட்டி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள், வெளிமாவட்ட வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. அதைப் போலவே உதகை நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.