கோத்தகிரி அரவேணு பகுதியில் கரடி தாக்கியதில் தோட்டத் தொழிலாளி படுகாயமடைந்தார்.
குன்னூர், பெள்ளட்டி மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்கிற வீரமணி (50). இவர், கோத்தகிரி, அரவேணு அனந்தகிரி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சுப்பிரமணி, தேயிலைத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வியாழக்கிழமை சென்றபோது, அங்கு மறைந்திருந்த கரடி சுப்பிரமணியைத் தாக்கியது. இதில் கை, கால்களில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த கோத்தகிரி வனச் சரகர் சீனிவாசன் உள்ளிட்ட வன அதிகாரிகள் சுப்பிரமணியத்திடம் விசாரணை மேற்கொண்டு, உரிய நிவாரணம் கிடைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தொட்டகம்பை, சோலூர் மட்டம், கீழ் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி வரும் கரடிகளைப் பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.