மஞ்சூர் அருகே சாலையின் கொண்டை ஊசி வளைவுகளில் இரவு நேரத்தில் காட்டெருமைகள் முகாமிடுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மஞ்சூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனத்தில் போதிய உணவு, தண்ணீரின்றி வெளியேறும் காட்டெருமைகள் அருகிலுள்ள விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கடந்த 3 ஆண்டுகளில் 30 காட்டெருமைகள், 20 காட்டுப் பன்றிகள் உடல் உபாதை ஏற்பட்டு உயரிழந்துள்ளன. காட்டெருமைகள் தாக்கியதில் குந்தா சரகத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 13-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பிக்கட்டி - மஞ்சூர் சாலையின் இடையே உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டிருந்த காட்டெருமைகளை தேயிலைத் தொழிலாளர்கள் வனப் பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து, தொழிலாளர்கள் இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அந்த காட்டெருமைகள் தொடர்ந்து சாலைக்கு வந்து அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்துகள், இருசக்கர வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பெங்கால் மட்டத்தில் இருந்து குந்தா பாலம் வரையுள்ள அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளில் காட்டெருமைகள் கூட்டமாக நிற்பதால் இரவு நேரத்தில் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.