நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்குப் பருவமழை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாலையில் ஆரம்பித்து இரவு நேரத்தில் பலத்த மழையாகப் பெய்து வருவதால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் மழைப் பொழிவு மட்டுமே இருந்த நிலையில் கடந்த 3 நாள்களாக மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால், சதுப்பு நில வனப் பகுதிகளிலும், சரிவான பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. இவ்வாறு விழும் மரங்கள் மின் கம்பிகளின் மீதும் சாய்வதால் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
உதகை-புதுமந்து சாலையில் உள்ள பாரஸ்ட் கேட் அருகே சாலையின் ஓரத்திலிருந்த மரம் புதன்கிழமை அதிகாலை மின் கம்பத்தோடு சேர்ந்து வீட்டின் மீது விழுந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். கூடலூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) : தேவாலாவில் 71, கூடலூரில் 48, அப்பர்பவானியில் 37, அவலாஞ்சியில் 37, கிளன்மார்கனில் 25, உதகையில் 15, எமரால்டில் 12, கல்லட்டியில் 9, குந்தாவில் 8, நடுவட்டத்தில் 6.5 குன்னூரில் 2.5.