நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாக பாரம் ஏற்றிக்கொண்டு நீலகிரி மாவட்டத்துக்குள் நுழையும் லாரிகளின் எடையைப் பரிசோதித்து அந்த லாரிகளைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்து வருகிறது குன்னூரில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கம்.
நீலகிரி மாவட்டத்துக்குள் நுழையும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் குன்னூர், கோத்தகிரி வழியாகத்தான் மாவட்டத்துக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் வாகனங்களில் லாரி எடையுடன் சேர்த்து 16 டன் எடைக்கும் அதிகமாக இருக்கும்போது, இப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும்போது பல்வேறு விபத்துகள் நடப்பதுடன், அதிக பாரத்தால் சாலைகளும் அடிக்கடி பழுதாகும் சூழல் ஏற்படுகிறது. மேலும், இரண்டு லாரிகளில் ஏற்றவேண்டிய பாரத்தை ஒரே லாரியில் ஏற்றுவதால் தங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து வந்தது.
இதுகுறித்து, காவல் துறையில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இருப்பினும், இப்பிரச்னை தொடர்ந்ததால் பொறுமையை இழந்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேரடியாக களத்தில் இறங்கி, அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை எடைபோட்டு அந்த எடைச் சீட்டுடன் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்து அபராதம் விதித்து வருகின்றனர். இதன்காரணமாக தற்போது அதிகபாரம் ஏற்றி வரும் லாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.