கூடுதல் ஏலத் தொகை: ஏலம் போகாத கோத்தகிரி பேருந்து நிலையம்
கோத்தகிரி பேரூராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையத்தின் ஏலத் தொகை அதிகம் என்பதால் தொடர்ந்து ஏலம் போகாமல் இருப்பது பேரூராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி பேரூராட்சி சார்பில், பொது நிதி மூலம் ராம்சந்த் பகுதியில் இரண்டு ஏ.டி.எம். மையங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஏ.டி.எம். மையங்களை எந்த வங்கியும் எடுக்க முன் வராத நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த 2 ஏ.டி.எம் மையங்களையும் பொது ஏலத்தில்விட பேரூராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும், பேருந்து நிலைய பராமரிப்பு, நுழைவுக் கட்டண வசூல் உரிமையும் ஏலம் விடப்பட்டது.
இதில், ஒரு கடையை அனுராதா என்பவர் மாத வாடகை ரூ. 10,100-க்கும், மற்றொரு கடையை முன்னாள் பேரூராட்சித் தலைவர் வாப்பு மாத வாடகை ரூ. 9,600-க்கும் ஏலம் கோரி எடுத்தனர். பேரூராட்சி சார்பில் பேருந்து நிலைய பராமரிப்பு, நுழைவுக் கட்டண ஏலத் தொகையாக மாதம் குறைந்தபட்சம் ரூ.73 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பேருந்து நிலையத்தை ஏலத்தில் கலந்துகொண்ட 16 பேரில் ஒருவரும் ஏலம் கோராததால், பேருந்து நிலைய ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக செயல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.
பேருந்து நிலைய ஏலம் ஒத்திவைப்பது இது மூன்றாவது முறையாகும். பேருந்து நிலையம் தொடர்ந்து ஏலம் போகாததால் பேரூராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு, பேருந்து நிலைய பராமரிப்புப் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.