ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென தேயிலைக் கூட்டுறவுத் தொழிற்சங்க கூட்டுக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட சிஐடியூ செயலாளர் ஆல்துரை வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டத்திலுள்ள 15 கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 480 நாள்கள் பணியாற்றிய தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் தொழிலாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் கூட்டுறவு ஆலை தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே பெற்று வரும் ரூ. 288 கூலியுடன் ரூ. 25 சேர்ந்து தருவதாக நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், தொழிற்சங்கத் தரப்பில் தொழிலாளர்களுக்கு இடைக்கால ஊதிய உயர்வாக தினசரி ரூ. 350 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த இடைக்கால ஊதிய உயர்வை இன்னும் 5 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சங்கம் சார்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.