குந்தா அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் அணை தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்களின் கீழ், 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர் மூலம் 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், குந்தா, கெத்தை , பரளி மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணை தூர்வாரப்படாததால் சேரும், சகதிகள் அதிக அளவில் உள்ளகதாகப் புகார் எழுந்தது.
இதனால், குறைந்த அளவு மழை பெய்தாலே அணை நிரம்பி விடுகிறது. மேலும், சகதிகளால் குந்தா அணையில் உள்ள சுரங்கப் பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பால் கெத்தை மின் நிலையத்துக்கு நீர் கொண்டு செல்வதில் தடை ஏற்படுகிறது.
குந்தா அணையைத் தூர்வார உலக வங்கி நிதி ரூ. 17 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது அணையைச் சுற்றிலும் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் குந்தா அணை தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.