குன்னூர் ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்டம் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
குன்னூர் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட நெடுகல்கம்பை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 மீ. தடுப்புச் சுவர், ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 200 மீ. நடைபாதை அமைக்கும் பணி, அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தைமலை கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் 1 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி , தைமலை முதல் அம்பேத்கர் நகர் வரை ரூ. 20 லட்சம் மதிப்பில் 1.1 கி. மீ. தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைப் பணி, பிரதான் மந்திர் கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் ஆடர்லி முதல் சேம்புகரை வரை ரூ. 4.23 கோடி மதிப்பில் 4.1 கி.மீ. தூரம் நடைபெற்று வரும் சாலைப் பணி, சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேலூர் ஒசட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவுக் கூடம், தாய்த் திட்டத்தின்கீழ் ரூ. 23 லட்சம் மதிப்பில் சிங்காரா பகுதியில் 1 கி. மீ. தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைப் பணி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடப்பள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.5.24 இலட்சம் மதிப்பில் உபதலை பகுதியிலும், ஜெகதளா பேரூராட்சிக்கு உள்பட்ட காரக்கொரை பகுதியில் ரூ. 14.00 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளையும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.