குன்னூர் அருகே இத்தலார் பகுதிக்கு உள்பட்ட விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் மாவட்ட ஆட்சியர், மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி, முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
குன்னூர் அருகே உள்ள இத்தலார் பகுதிக்கு உள்பட்ட தேனிதலா, தெம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்குள்ள கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக உள்ளோம். பருவமழை பொய்த்த நிலையில் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வறட்சியின் பிடியில் இருந்து விடுபட பயிர்க் கடன் வழங்கக் கோரி கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்துள்ளோம்.
ஆனால், கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு எவ்விதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. விவசாயிகளுக்காக கடன் வழங்க ரூ. 4 கோடிக்குமேல் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் தாமதிக்கின்றனர். எனவே, விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.