தொடர் விடுமுறை காரணமாக, குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் 2-ஆம் பருவத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு முடிந்து கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது.
குறிப்பாக, குன்னூரில் உள்ள டால்பின்நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், குன்னூரில் இதமான காலநிலை நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் இதமான காற்றும் வீசுகிறது. மேலும், சிம்ஸ் பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.