தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் சடலத்தை வாங்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 2-ஆவது நாளாக வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மஞ்சூர் அருகே எமரால்டு கே.கே.நகரைச் சேர்ந்தவர் ஜோதி என்பவரின் மகன் சுரேஷ் (25). கூலித் தொழிலாளி. இவர், தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் விஜயகுமார் மனைவி லதா என்பவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது அங்கு வந்த லதாவின் கணவர் விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் வெங்கடாசலம், குமார், கிருஷ்ணராஜ் ஆகியோர் சுரேஷை தாக்கியுள்ளனர்.
இப்பிரச்னை குறித்து சுரேஷை அவரது தந்தை ஜோதி திட்டியதால் மனமுடைந்த சுரேஷ், வெள்ளிக்கிழமை விஷம் குடித்துள்ளார்.
இதையடுத்து உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், தனது மகன் சுரேஷ் உயிரிழப்புக்கு லதாவின் உறவினர்கள் வெங்கடாசலம், குமார், கிருஷ்ணராஜ் ஆகியோர்தான் காரணம் என்று கூறி
சுரேஷின் உடலை அவரது பெற்றோர் 2-ஆவது நாளாக வாங்க மறுத்து வருகின்றனர்.
மேலும், இப்பிரச்னை தொடர்பாக ஜோதி கொடுத்த புகாரின்பேரில் உதகை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கே.கே.நகர், எம்.பாலடா, கே.கே.நகர் பஜார் ஆகிய பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.