நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 13 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரூ.16 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கள ஆய்வு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக குன்னூர் நகராட்சியில் 3 குழுக்களும், உதகை, நெல்லியாளம் நகராட்சிகளில் தலா 2 குழுக்களும், கூடலூர் நகராட்சியில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருந்தன.
இக்குழுவினர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்து, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்தவர்களிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்ததுடன், அதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட துணிப் பைகளை வழங்கினர்.
இந்த ஆய்வின்போது 13 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ.16,050 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.