உதகையில் நலிவடைந்த நிலையில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 168 பேருக்கு மத்திய அரசு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான மறைந்த ராஜன் உருவ படத் திறப்பு மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளிப்பு நிகழ்ச்சி குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் மர்மமாகவே உள்ளன. இதனைக் கண்டறிய நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை குழு அமைக்க வேண்டும்.
லஞ்ச, ஊழலை தடுக்க தமிழக அரசு லோக்பால் சட்டத்தை கொண்டு வரவேண்டும் . ஜி.எஸ்.டி வரியினால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழில்களும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தியதால் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் தேயிலையைப் பறிக்காமல் உள்ளனர். உதகையில் நலிவடைந்த நிலையில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் பணியாற்றிய பெரும்பாலான ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாக்கியுள்ள 168 தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு விருப்ப ஓய்வு அளிக்க முன்வரவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். பத்ரி, சிஐடியூ சங்க தலைவர் ஹால்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.