ஜி.எஸ்.டி. வரியால் நிலவி வரும் பிரச்னை காரணமாக வங்கியில் கடன் பெற்று பசுந்தேயிலைக்கான பணத்தை இன்ட்கோ சர்வ் நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதால் தேயிலை ஏல மையங்களில் தேயிலைத் தூள் விற்பனையாகாமல் உள்ளது. இதனால், 50 லட்சம் கிலோ தேயிலைத் தூள்கள் தேங்கி உள்ளதால் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலையை வாங்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், விவசாயிகள் தங்களது தேயிலைத் தோட்டங்களில் பசுந்தேயிலையைப் பறிக்காததால் அவை செடியிலேயே முற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள 15 அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் இன்ட்கோ சர்வ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதில் 25 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் கிலோ வீதம் மாதத்துக்கு 75 லட்சத்துக்கும் மேல் பசுந்தேயிலையை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதில் இடைத்தரகர்கள், வர்த்தகர்கள் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் அரசு கூட்டுறவு ஏல மையத்திலும் தேயிலைத் தூள் விற்பனையாகாமல் உள்ளது. இதனால், பசுந்தேயிலைக்கான விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து இன்ட்கோ சர்வ் தலைவர் சிவகுமார் கூறியதாவது:
ஏல மையங்களில் தேயிலைத் தூள் விற்பனையாகாததால் இன்ட்கோ சர்வ், குன்னூர் சேமிப்புக் கிடங்குகள் மட்டுமல்லாமல் மேட்டுப்பாளையத்திலுள்ள கிடங்குகள், கூட்டுறவு தொழிற்சாலைகளில் ரூ. 17 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.
இதேபோல் ஏல மையத்திலும் ரூ. 30 கோடி மதிப்பாலான தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்காக வங்கி மூலம் ரூ. 7 கோடி கடன் பெற்று அனைத்து உறுப்பினர்களுக்கும் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ. 10 என விலை நிர்ணயம் செய்து வழங்கி வருகிறோம் என்றார்.