பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவர் விஷம் அருந்தி திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
மாணவரின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பந்தலூர் அருகே அய்யங்கொல்லியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் செல்வத்தின் மகன் பிரவீண். இவரது ஆசிரியர், பிரவீணை அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த பிரவீண் திங்கள்கிழமை அதிகாலை விஷம் அருந்தியுள்ளார். இதையறிந்த அவரது தந்தை செல்வன் உள்ளிட்டோர் பிரவீணை சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
மாணவரின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரவீணின் உறவினர்கள் அய்யங்கொல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல் துறையினர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து சேரம்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.