மஞ்சூர் அருகே தொட்டக்கம்பை கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த ஒற்றை யானை, அங்குள்ள விளை நிலத்தை சேதப்படுத்தியது.
மஞ்சூர் அருகே தொட்டக்கம்பை, கட்லாடா, மேல்குந்தா, கெரப்பக்காடு, காந்திபுரம், அம்பேத்கர் நகர், சேரனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. அடர்ந்த தேயிலைத் தோட்டம், வனப்பகுதியை ஒட்டிய இப்பகுதிகளுக்குள் உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, காட்டுப் பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி நுழைவது வழக்கம்.
இந்நிலையில், தொட்டக்கம்பை கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒற்றை யானை நுழைந்தது. பின்னர் அந்த யானை அங்குள்ள சுகுமாறன் என்பவர் தோட்டத்தில் நுழைந்து சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிரை சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்து குந்தா வனச்சரகர் ராமச்சந்திரன், வனவர் ரவிச்சந்திரன், வனக் காப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையால் சேதப்படுத்தப்பட்ட விளை நிலத்தை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து யானை நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.