உதகை நகராட்சி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் தங்களது வீடுகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனர்.
உதகை நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமாக சுமார் 410 குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் நகர்மன்ற ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டவை ஆகும்.
இந்நிலையில் பலர், நகராட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் வீடுகளை காலி செய்யாமல் தொடர்ந்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், அந்தக் குடியிருப்புகளை உடனடியாக தங்களுக்கு ஒதுக்க வேண்டுமெனக்கோரி தற்போது பணியாற்றும் ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற ஊழியர்களை அகற்றி அந்த வீடுகளை தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டது.
இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 60 நாள் அவகாசம் அளிக்கப்பட்ட போதிலும் யாரும் வீட்டை காலி செய்யவில்லை. இதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக காலி செய்யாத 110 வீடுகளுக்கு சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியது.
ஒரு சில வீடுகள் காலி செய்யப்பட்டிருந்த நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், வீடுகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக்கோரியும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவை உதகை நகராட்சி ஆணையரின் பரிசீலனைக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறுகையில், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படியே நாங்கள் செயல்பட்டுள்ளோம். காலி செய்யாத வீடுகளுக்கு சீல் வைக்கும் பணிகள் ஜூலை 7-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும்' என்றார்.