நீலகிரி மாவட்டத்தில் சீசனை முன்னிட்டு இங்குள்ள தெருவிளக்குகளைப் பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வோண்டுகோள் விடுத்துள்ளனர்.
குன்னூர், சாமன்னா பார்க் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் அவ்வழியாகச் செல்லும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இங்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும், தனியார் பேருந்துகளுக்குக் காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளை முறையாகப் பராமரிக்க நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.