மேற்கு வங்க தம்பதியினர் தவறவிட்ட பணப்பையை நீலகிரி காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்திலிருந்து உதகைக்கு மே 15-ஆம் தேதி சுற்றுலா வந்த தம்பதியினர் பைக்காரா பகுதியில் தங்களுடை கைப்பையைத் தொலைத்துவிட்டனர். அதில், பணம் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட அனைத்தும் இருந்ததால் செய்வதறியாமல் தவித்த அத்தம்பதியினர் பல இடங்களிலும் தேடி தங்களது கைப்பை கிடைக்காததால் உதகையில் உள்ள காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பைக்காரா தனி உதவி ஆய்வாளர் பாபுஜி, தலைமைக் காவலர் தினேஷ் ஆகியோர் கைப்பையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 9-ஆவது மைல் பகுதியில் அவர்களது கைப்பை கிடைத்தது. அதில், ரூ. 32 ஆயிரம், ஏடிஎம் கார்டு, அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்தன.
இதையடுத்து, அந்தத் தம்பதியினரை பைக்காரா காவல் நிலையத்துக்கு வரவழைத்து கைப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பையைப் பெற்றுக் கொண்ட தம்பதியினர், நீலகிரி காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.