கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள ஏழைகளின் குடிசைகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முதல்வரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வாசு, மாவட்டச் செயலாளர் சி.முருகன், நிர்வாகிகள் குஞ்சுமுகமது, டி.பி.அரவிந்தாட்சன் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 10 ஆயிரம் குடிசைகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் உள்ள இவர்கள் இருட்டில் வாழ்ந்து வருகின்றனர். அரசு வழங்கிய இலவசப் பொருள்களையும் இதுவரை அவர்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
2002-2004 காலகட்டத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நிலுவையில் உள்ள மின் இணைப்பு கோரிய விண்ணப்பதாரர்களுக்கு மேலும் சில நிபந்தனைகளுடன் மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தார்.
அதில் சிலரால் மின் இணைப்புப் பெற முடியாமல் போனது. அதனால் பிரிவு-17 மற்றும் பிரிவு 53-இன் கீழ் உள்ள நிலங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கதவு எண் உள்பட அனைத்தும் அரசு வழங்கியுள்ளது. மின் இணைப்பு மட்டும் தரமறுக்கிறது.
எனவே, முதல்வர் எங்களது கோரிக்கை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.