மஞ்சூர்- கோவை சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மஞ்சூர்- கோவை சாலையில் கெத்தை நீர்மின் நிலையம் உள்ளது. இதையொட்டி மின்வாரிய அலுவலர், ஊழியர் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் விவசாயிகள் பாக்கு, வாழை, மலைக் காய்கறிகளைப் பயிரிட்டுள்ளனர்.
பத்துக்கு மேற்பட்ட காட்டுயானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. மேலும் கெத்தை அருகே முள்ளி பகுதியை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதியில் இருந்தும் உணவு, குடிநீர் தேடி ஏராளமான காட்டு யானைகள் இடம் பெயர்ந்து தமிழகத்தினுள் வருகின்றன. இந்த யானைகளும் கெத்தை, முள்ளி, மானார், அத்திக்கடவு பகுதிகளில் நடமாடுகின்றன.
இந்த யானைகள் சாலையில் ஆங்காங்கே நின்று, அவ்வழியாக வரும் அரசு பேருந்துகள், வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே, இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்த குந்தா வனச்சரகர் ராமசந்திரன் கூறியதாவது: சாலைகளில் காட்டு யானைகளைக் கண்டால், வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். பயணிகள் கீழே இறங்கி யானைகளை நோக்கி சத்தமிடுவது, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடக் கூடாது.
வாகனங்கள் மூலம் யானைகளைப் பின்தொடர்தல், அவற்றை விரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. காட்டு யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.