குன்னூர் நான்சச் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் "டெங்கு' காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளியூர்களுக்கு சென்று வந்தவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகப்படியாக ஏற்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள நான்சச், பில்லூர் மட்டம் பகுதிகளில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி கவிதா(38) என்பவரிடம் அவர் விசாரித்தார். அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததும், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கவிதா வெளியூருக்குச் செல்லாதபோதும் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நான்சச் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (40). ஐபெக் எஸ்டேட்டை சேர்ந்த ஜெரியா தேவி (40) ஆகியோருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ட்ரூக் எஸ்டேட்டை சேர்ந்த முருகன் (62) குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்சச் எஸ்டேட் பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு கழிப்பிடவசதி, கழிவுநீர் கால்வாய் வசதிகள் உள்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்' என்றனர்.
இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.