நீலகிரியில் உற்பத்தியாகும் வெள்ளைப் பூண்டின் விற்பனையில் இடைத்தரகர்களின் கமிஷன் தொகை உயர்ந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மலைக் காய்கறி விவசாயம் அதிக அளவில் மேற்கொண்டு வந்தாலும், குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளைப் பூண்டு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கிலோவுக்கு அதிகபட்சம் ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரியில் உற்பத்தியாகும் வெள்ளைப் பூண்டு குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் மாறுபட்டு நிலவும் காலநிலை காரணமாக வெள்ளைப் பூண்டை மேட்டுப்பாளையத்துக்கு எடுத்துச் சென்று விவசாயிகள் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தனிப்பட்ட வியாபாரிகளை நம்பிச் செல்ல வேண்டியுள்ளது.
மேலும், கமிஷன் தொகையை 7 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி உள்ளனர். ஏற்கெனவே தேயிலை விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குப் பூண்டு விற்பனையிலும் ஏற்பட்டுள்ள இந்த கமிஷன் உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.