மஞ்சூர் அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் வாரியத் தொழிலாளி உயிரிழந்தார்.
மஞ்சூர் அருகே பிக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த தளபதி மகன் மகேந்திரன் (35). இவர், மின் வாரியத் துறையில் தாற்காலிகத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்கட்டி, சிவசக்தி நகர் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மகேந்திரன் ஏறி சீரமைப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மகேந்திரனின் உடலை காவல் துறையினர் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, மஞ்சூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.