நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே தேயிலைத் தோட்டத்துக்குள் கரடி சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மஞ்சூர் அருகே தூதூர்மட்டத்தை அடுத்த கெரடாலீஸ், டெரேமியா, அணிமன் ஆகிய கிராமங்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அணிமன், கெரடாலீஸ் பகுதியில் கொய்யாப் பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதைச் சாப்பிட பகல் நேரத்திலேயே கரடி வரத் தொடங்கியுள்ளது.
அணிமன் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் வியாழக்கிழமை காலை கரடி ஒன்று புகுந்தது. இதைப் பார்த்த மக்கள் சப்தம் போட்டதால் அது அங்கிருந்து ஓடிச் சென்றது.
இதையறிந்த வனத் துறையினர் அங்கு வந்து கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர். பகல் நேரத்தில் ஊருக்குள் நுழையும் இந்தக் கரடியைப் பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.