மசினக்குடி பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள தனியார் ரிசார்ட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஒரு மாதமாக இதற்கான பணிகள் மாவட்டம் முழுதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில், உதகையில் மட்டும் 80 கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டு, சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டியுள்ள பகுதிகளிலும், யானை வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இக்கட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் பெற்ற தடை ஆணை காரணமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் விதிகளை மீறியதாக கண்டறியப்பட்ட கட்டடங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.