நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த சாண்டிநள்ளா பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதியுஷ் (21). இவர் அங்குள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரும் இவரது நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து 4 மோட்டார் பைக்குகளில் கடந்த சனிக்கிழமை உதகைக்குச் சுற்றுலா வந்துள்ளனர். 2 நாள் சுற்றுலாவை முடித்து விட்டு திங்கள்கிழமை காலையில் கோழிக்கோட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். பிரதியுஷ் ஓட்டிய பைக்கில் அவரது நண்பர் ராகுல் என்பவர் அமர்ந்திருந்தாராம். உதகையிலிருந்து செல்லும் வழியில் சாண்டிநள்ளா நீர்த்தேக்கம் அருகே ஒரு வளைவில் பிரதியுஷின் பைக் செல்லும்போது எதிரில் வந்த ராணுவ வாகனத்தின் மீது பைக் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பிரதியுஷ் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த ராகுலை மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து குறித்து பைக்காரா காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.