கோத்தகிரி கேர்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் விநாடி-வினா போட்டி வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் அறிவியல் விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியின் ஒரு பகுதியாக தாலுகா அளவிலான போட்டி, கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பெள்ளி தலைமை வகித்தார், கோத்தகிரி லயன்ஸ் கிளப் தலைவர் நந்தகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டியைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த போட்டியில், கோத்தகிரி கேர்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளி, கிரீன்வேலி மெட்ரிக் பள்ளி மற்றும் பாண்டியராஜ் நினைவு மெட்ரிக் பள்ளி ஆகியவை முதலிடம் பிடித்தன.
கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, புனித மரியன்னை பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகியவை இரண்டாம் இடமும், குண்டாடா கெரடாமட்டம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் புனித அந்தோணியர் நடுநிலைப் பள்ளி ஆகியவை மூன்றாம் இடம் பெற்று வெற்றி பெற்றன. இதில், முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற பள்ளிகள், மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றன. இப்போட்டிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன், சமூக ஆர்வலர்கள் நாகராஜ் போஜன் மற்றும் ராமதாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆசிரியர் ராஜு செய்திருந்தார்.