அஞ்சல் துறை சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தீன்தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளிக் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் புதிய வாய்ப்பை இந்திய அஞ்சல் துறை அளித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையை பெறுவதற்கு 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு இணையான தர வரிசையில் இருப்பவர்களில் பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்புக் குழுவில் உறுப்பினர்களாகவும், தனிப்பட்ட முறையில் அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் தலை விநாடி- விநா மற்றும் அஞ்சல் தலை சேகரிப்புத் திட்டங்களின் கீழ் இதற்கான தேர்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும். தேர்வுக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைசி நாள் என தெரிவித்துள்ளார்.