தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவே முடியாது என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. அகர்வால் குழு அறிக்கை ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாமென கூறியிருந்தாலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எந்த காலத்திலும் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவே முடியாது.
கஜா புயலால் 1 லட்சத்து 35 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 23,000 உள்ளாட்சி ஊழியர்களும், 26,000 மின் ஊழியர்களும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதனால் நிவாரணப் பணிகள் விரைவில் முடியும். கஜா புயல் தாக்கிய பகுதிகளில் ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் உள்ளாட்சித் துறையின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் 14 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நீலகிரியில் நிலப்பட்டா வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடையின் காரணமாகவே வீடுகள் கட்டுவதில் தொய்விருந்தது. தற்போது அந்த தடை நிவர்த்தி செய்யப்பட்டு 2,100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 1,010 வீடுகள் தாயகம் திரும்பிய மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.
பேட்டியின்போது மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன் ஆகியோர் உடனிருந்தனர்.