கோத்திகிரி கட்டபெட்டு பஜார் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கோத்தகிரி, கட்டபெட்டு பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) குணசேகரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கட்டபெட்டு பஜார் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 12 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு, ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.