உதகையில் சாம்பல் புதன் தினம் அனுசரிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கும் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையிலிருந்து தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகை வரையிலான 47 நாள்கள் கடைப்பிடிக்கப்படும் இந்த தவக்காலத்தில் இயேசுவின் பாடுகள் தொடர்பான நிகழ்வுகள் நினைவு கூரப்படும்.
சாம்பல் புதனை ஒட்டி உதகை திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். அதேபோல, உதகையில் புனித திரேசன்னை ஆலயத்திலும், புனித மரியன்னை ஆலயத்திலும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தவக் காலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மாலை அணிந்து விரதமிருப்பர். இவர்கள் புனித வெள்ளியன்று கேரளத்திலுள்ள புனித தாமஸ் பிரார்த்தனை நடத்திச் சென்ற மலைப் பகுதியான மலையாட்டூர் ஆலயத்துக்குச் சென்று வருவர். இதற்காக திட்டமிட்டிருந்தோர் உதகையில் காந்தல் பகுதியிலுள்ள குருசடி திருத்தலத்தில் புதன்கிழமை காலை மாலையணிந்தனர்.