கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில் உள்ள நீரோடை பகுதியில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுமாறு இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி அருகிலுள்ள கூக்கல்தொரை பகுதியில் உள்ள நீரோடையில் செல்லும் தண்ணீரை கூக்கல்தொரை , சீகொளா, அண்ணாநகர், பேட்லாடா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீரோடையில் நீரைச் சேமிக்க தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. நீர் தேங்கும் இடங்களில் அடர்ந்த செடி கொடிகள் வளர்ந்துள்ளன. ஆளுயர செடி கொடிகளை வெட்டி அகற்றாததால் தண்ணீரை செடிகள் உறிஞ்சி வீணாகிறது.
இது தவிர, இப் பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் பொருள்கள், கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர இப் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
ஏராளமான பாம்புகளும் செடிகளுக்குள் தஞ்சமடைந்துள்ளன. எனவே, ஊராட்சி நிர்வாகம் செடிகளை வெட்டி அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.