மலைக் காய்கறிகளை விற்பனை செய்ய நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலர் சார்பில், மலைக் காய்கறி விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் மலைக் காய் கறிகளை அந்தந்தப் பகுதியில் உள்ள உழவர் சந்தை, தினச் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் மலைக் காய்கறிகளை விற்பனை செய்து பயனடையும் வகையில், மானிய உதவியுடன் நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதகை , குன்னூர், கோத்தகிரி பகுதியில் சில விவசாயிகளுக்கு ரூ. 15 ஆயிரம் மானியத்தில் நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பிற பகுதி விவசாயிகளுக்கும் நடமாடும் காய்கறி வண்டிகள் மானியத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் ஒவ்வொரு வட்டத்திலும் தலா 5 நடமாடும் காய்கறி வண்டி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பித்தால் தகுதியானவர்களுக்கு படிப்படியாக காய்கறி வண்டி வழங்கப்படும் என்றனர்.