குந்தா தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குந்தா வட்டாட்சியர் சாந்தினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டம், உதகை உள்கோட்டத்துக்கு உள்பட்ட குந்தா தாலுகாவில் ஒரு கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நியமனம் மூலமாக சுழற்சி முறை வரிசை எண் 11-இன் படி, பொது பிரிவில் இருந்து பணியாளர் நியமனம் செய்யப்பட உள்ளார்.
இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 5-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். குந்தா வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கவேண்டும்.
1.1.2018 தேதியில் மேற்குறிப்பிட்ட பொது பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர் 21 வயது முதல் 32 வயது உடையவராக இருக்கவேண்டும்.
விண்ணப்பதாரர், பூர்த்தி செய்யப்பட்ட புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பமிட்ட கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றை இணைத்து, குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில், அலுவலக வேலைநாள்களில் 2.2.2018-க்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.