கூடலூர் பேருந்து நிலையத்தில் கார் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால் மழைக்குகூட பயணிகள் ஒதுங்கி நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கூடலூரில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்கும் இடத்தில் கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், தற்போது கன மழை பெய்து வரும் நிலையில் பயணிகள் பேருந்து நிலையத்தில் ஒதுங்கி நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கூடலூர் நகரம் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் நகரங்களை இணைக்கும் பகுதி என்பதால் அந்த மாநிலங்களில் இருந்து பொது மக்கள் கூடலூர் வந்து செல்கின்றனர்.
பேருந்து நிலையத்தில் வெளி மாநிலத்தவர், வெளியூர் பயணிகள், உள்ளூர் பயணிகள் என பலரும் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பால் அவதிப்படுகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்குமிடத்தை ஆக்கிமிரப்பில் இருந்து மீட்டு முறைப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.