குன்னூர் சிம்ஸ்பூங்கா அருகே ஆரஞ்ச் குரோவ் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால், அதனிடம் இருந்து காப்பாற்றும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை தன்னார்வ அமைப்பினர் மீட்டுக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னூர் சிம்ஸ்பூங்கா அருகே ஆரஞ்ச் குரோவ் பகுதியில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், சிறுத்தை தாக்கி தெரு நாய் இறந்துள்ளது.
இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் அருவங்காடு டபிள்யு.வி.எஸ். கால்நடை தன்னார்வ அமைப்பினர் நகராட்சி உதவியுடன் இப்பகுதியில் சுற்றித் திரிந்த 10 நாய்களை கூண்டில் அடைத்து வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றனர். சிறுத்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு தெருநாய்கள் என்பதால் தெரு நாய்களைத் தேடி ஊருக்குள் சிறுத்தைகள் வருவதை தடுக்கவும், தெரு நாய்களைக் காப்பாற்றவும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.