தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரையைக் கண்டித்து உதகையில் காபி ஹவுஸ் சதுக்கத்தில் மாவட்ட திமுக துணை செயலாளர் ஜே.ரவிகுமார் தலைமையில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூரில்...: ராமராஜ்ஜிய ரதயாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குன்னூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட்டனர். மாவட்ட திமுக சார்பில் 75-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்டச் செயலாளர் பா.மு. முபாரக் தலைமையில், குன்னூர் மவுன்ட் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கூடலூரில்...: ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 50 மேற்பட்டோர், கூடலூர் பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கூடலூர் போலீஸார் கைது செய்தனர்.
பந்தலூரில்...: பந்தலூரில் நெல்லியாளம் நகர திமுக செயலாளர் காசிலிங்கம் தலைமையில் பந்தலூர் பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.திராவிடமணி, நகரச் செயலாளர் காசிலிங்கம் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல பந்தலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர் ஐ.பெரியசாமி தலைமையில் து.ராஜேந்திர பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தேவாலா போலீஸார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுமார் 10 இடங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களில், திமுகவினரோடு தமுமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் சேர்ந்த 7 பெண்கள் உள்பட 380 பேர் கைது செய்யப்பட்டனர்.