குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடர் மழை மற்றும் கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், பனி மூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.
இப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடர்த்தியான மேகமூட்டத்தால் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டியுள்ளது. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த தொடர் மழையாலும், மேகமூட்டம் அதிகரித்து காணப்பட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை கா ட்சிகளைக் காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர்.
பனி மூட்டத்துடன் கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெம்மை ஆடைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சில பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை விடப்பட்டன.
மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.