நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், அதற்கான கொண்டாட்ட நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி வகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. 6 மாதங்களுக்கு ஒருமுறையிலிருந்து 12 வருடங்களுக்கு ஒருமுறை நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பூத்துக் குலுங்கும் இத்தகைய குறிஞ்சி மலர்களுக்காக நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தமிழக அரசின் சார்பிலும் சிறப்பு விழா கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தில் முதல்முறையாக உதகை அருகிலுள்ள கல்லட்டி பகுதியில் நடைபெற்ற குறிஞ்சி விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் கோடை விழா, பழக் கண்காட்சி , மலர்க் காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனைத் திரவிய கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்க வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அழகும் சிறப்பும் மிக்க இந்த மாவட்டத்துக்கு மேலும் அழகு சேர்த்து பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம், கல்லட்டி, கீழ்கோத்தகிரி மலைப் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இப்பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்பதையும், இப்பூவின் சிறப்பையும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக முதல்முறையாக நிகழாண்டில் குறிஞ்சி விழா நடத்தப்படுகிறது.
குறிஞ்சி மலர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான பழனி, ஆனைமலை, நீலகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 6,000 அடி உயரத்தில் ஜூன் முதல் டிசம்பர் வரை பூப்பவை. செப்டம்பர் மாதத்தில்தான் அதிக அளவில் பூக்கும். கல்லட்டி, கீழ் கோத்தகிரி பகுதிகளில் பூத்திருக்கும் குறிஞ்சிப் பூக்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஆதி திராவிடர்- பழங்குடியினர் நலத் துறை சார்பில், கோழிப் பண்ணை வைக்க காட்டு நாயக்கர் முன்னேற்ற சங்கத்துக்கு ரூ. 3 லட்சத்துக்கான காசோலையும், வீட்டுத் தோட்டம் அமைக்க தோடர் இயற்கை வேளாண்மை நல சங்கத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும், மாவட்ட விளையாட்டு நலத் துறை சார்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களும் ஆட்சியரால் வழங்கப்பட்டன.
ஆட்சியர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் படகர் இன மக்களின் பாரம்பரிய நடனமான படுகர் நடனமாடி உற்சாகப்படுத்தினர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரிய உணவு மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உதகை கோட்டாட்சியர் சுரேஷ், ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல அலுவலர் மணிவேல், சமூகநலத் துறை அலுவலர் தேவகுமாரி, முதன்மைக் கல்வி அலுவலர் நசருதீன், ரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.