முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு தொடர்பான கருத்தரங்கு திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்களை சுயதொழில் நடத்திட ஊக்குவித்தல் தலைப்பின் கீழ், தொழில் முனைவோர் கருத்தரங்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அனைத்து அரசுத் துறைகள், வங்கிகளின் மூலம் சுயதொழில் தொடங்கிட வழங்கப்படும் கடனுதவிகள், அரசு நலத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கிக் கூறினார். மேலும், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்புத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம் ஆகியன மூலமாக வழங்கப்படுகின்ற கடனுதவிகள், மானியத் திட்டங்கள் தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கப்பட்டது.
கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் சந்திரசேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.காளிமுத்து உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.