பல்லடம் அருகே உள்ள கொடுவாயில் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் எரிவாயு மயானம் மே 21-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.
பல்லடம் அருகே உள்ள கொடுவாயில் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் எரிவாயு மயானம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், செயலாளர் பாலசுப்பிரமணியன், திட்டத் தலைவர் முத்துசாமி ஆகியார் கூறியதாவது:
பொங்கலூர் ஒன்றியம், கொடுவாய் வெள்ளியம்பாளையத்தில் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் 'சொர்க்கம்' எனும் பெயரில் எரிவாயு மயானம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, இரண்டு தகனமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குளியலறை, கழிப்பறை, தியான மண்டபம், அமரர் ஊர்தி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
'வெட் ஸ்கிரப்பர்' எனும் தொழில்நுட்ப முறையில் சடலங்களை எரிப்பதால் துகள்கள் காற்றில் பறக்காது, சுற்றுச்சூழல் மாசு அடையாது. தற்போது 85 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதம் உள்ள பணிகள் விரைவில் நிறைவடையும்.
மே 21-ஆம் தேதி எரிவாயு மயானம் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன், சு.குணசேகரன், விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
இந்தப் பேட்டியின்போது, ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரித் தலைவர் கே.எம்.தங்கராஜ், பொருளாளர் எம்.கோவிந்தசாமி, சமூக ஆர்வலர் வி.சி.ஆர்.பாலு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் குப்புசாமி, ராம.சங்கரலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.