அதிநவீன பின்னலாடை உற்பத்திக்கான இயந்திர வகைகளை அறிமுகம் செய்யும் சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திரக் கண்காட்சி (நிட்-ஷோ ) திருப்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் பயன்பெறும் வகையில், சிட்டி லீவ்ஸ் நிறுவனம் சார்பில், பின்னலாடை உற்பத்திக்கான நவீன இயந்திரங்களின் வரவுகளை அறிமுகம் செய்யும் வகையில் நிட்-ஷோ இயந்திர கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான இயந்திர கண்காட்சி திருப்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தென்மண்டலத் தலைவர் ஏ.சக்திவேல் தொடங்கி வைத்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), ஏ.நடராஜன் (பல்லடம்), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம், நிட்மா தலைவர் ரத்தினசாமி, சிஸ்மா சங்கத் தலைவர் கே.எஸ்.பாபுஜி, டெக்பா சங்கத் தலைவர் ஸ்ரீகாந்த், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் (டீமா) சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், சைமா சங்க பொதுச் செயலாளர் பொன்னுசாமி உள்பட தொழில் துறையினர் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில், மொத்தம் உள்ள 600 அரங்குகளில் ஜப்பான், துருக்கி, சீனா, ஐரோப்பா, போர்ச்சுக்கல் என பல்வேறு வெளிநாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டு இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் என 400 நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளன. இதில், அதிநவீன நிட்டிங் இயந்திரங்கள், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, டையிங், தையல், மை, ரசாயனங்கள், செயற்கை நூலிழை துணி ரகங்கள், ஆயத்த ஆடை துறை பயன்பாட்டுக்கான அனைத்து வகை இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னலாடை உற்பத்திக்கு உதவும் மதிப்பு கூட்டுப் பொருள்களான பட்டன்,
ஜிப், வண்ண கற்கள், லேஸ், வண்ண நூல், இரவில் ஒளிரும் நூல் இழைகள், வெளிநாட்டு இறக்குமதி நவீன இயந்திரங்கள், சிறு,குறு தொழில்
துறையினருக்கான சிறப்பு தொழில் வாய்ப்புகள் குறித்த தகவல் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியானது வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. காலை காலை 10 முதல் இரவு 7 மணி வரை அனுமதி உண்டு.