திருப்பூரில் குடியிருப்புகளுக்கு அருகே அமைந்துள்ள 2 மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமியிடம், திருப்பூர், வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட வஞ்சி நகர், பூங்கா நகர், சபரி நகர், ஜெயலலிதா நகர், காளிகுமரன் நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
எங்கள் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு அருகில், தாராபுரம் சாலை மற்றும் பல்லடம் சாலையை இணைக்கும் பிரதான சாலையில் இரு மதுக் கடைகள் அமைந்துள்ளன. இந்த மதுக் கடைகளால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
இரு கடைகளும் விதிகளை மீறி மதுக் கூடத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கும் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, இரு மதுக்கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கருப்புக் கொடி ஏந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.