விவசாயிகளுக்கு ஆதரவாக உடுமலையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு வந்த இவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர். தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் மத்திய, மாநில அரசுகள் இந்தத் திட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இதற்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.