பல்லடத்தில் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற 11 லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பல்லடம், செட்டிபாளையம் சாலையில் திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக 5 லாரிகளை நிறுத்தி விசாரணை நடைபெற்றது.
இதில் 4 லாரியில் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்றதும், எந்த ஆவணமும் இன்றி இயங்கி வந்த ஒரு லாரியையும் பறிமுதல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, பள்ளபாளையம் செங்குளத்தில் அனுமதியின்றி மண் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட 6 லாரிகளையும், 2 பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தார்.
அதைத் தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த ஆய்வின்போது, பல்லடம் வட்டாட்சியர் (பொறுப்பு) ரவீந்திரன், வருவாய் ஆய்வாளர் பபிதா, கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.