ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினர் அமைதிப் பேரணி

தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு திருப்பூரில் அதிமுக சார்பில் அமைதிப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு திருப்பூரில் அதிமுக சார்பில் அமைதிப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தார். அவரது  நினைவு நாளை முன்னிட்டு  திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் பல்வேறு  இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
  திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் குமரன் சாலையில் இருந்து புறப்பட்ட அமைதிப் பேரணியில்  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதற்கு,  மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமை வகித்தார். ரயில் நிலையம் முன்பாக இருந்து புறப்பட்ட இப்பேரணி குமரன் சாலை வழியாக மாநகராட்சி அருகே வந்தடைந்தது. இந்தப் பேரணியில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.  மாநகராட்சி அருகே மலர்களால் அலங்காரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
   இதில்,  எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில், தனக்கென வாழாது, தமிழக மக்கள் நலனுக்காக வாழ்ந்து, மக்களின் இதயத்தில் குடியிருப்பவர் ஜெயலலிதா. அவருக்கு தமிழக மக்கள் எழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அவர் வழியில் நடப்போம் என்றார்.  திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா, தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன், அவைத் தலைவர் பழனிசாமி, முன்னாள் மண்டலத் தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் பொது மக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் உருவப் படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தினர்.
வெள்ளக்கோவில், மூலனூரில்...:  வெள்ளக்கோவில், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி, மயில்ரங்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் சந்திரமோகன், ஊராட்சி அதிமுக செயலாளர் கண்ணுசாமி, முன்னாள் கவுன்சிலர் பிரகதீஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் கிராமம் புளியங்காட்டுப்புதூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
   மூலனூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு ஒன்றியச் செயலாளர் பெரியசாமி, பேரூராட்சி செயலாளர் சுப்பிரமணி, அம்மா பேரவை செல்லமுத்து உள்ளிட்ட அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
காங்கயத்தில்...: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, காங்கயம் பேருந்து நிலையம் முன்பு அவரது உருவப் படத்துக்கு அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. காங்கயம் நகரச் செயலர் ஜி.மணிமாறன், நகர அவைத் தலைவர் ஏ.எஸ்.பழனிசாமி, நகர ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் என்.பாலகிருஷ்ணன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சி.கந்தசாமி, காங்கயம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.பி.துரைசாமி உள்ளிட்ட அதிமுகவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தாராபுரத்தில்...: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு நகரச் செயலர் டி.டி.காமராஜ் தலைமையில் அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர். 
தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா  உருவப் படத்துக்கு  நகரச்  செயலர் வாரணவாசை தலைமையில் டி.டி.வி.தினகரன் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடுமலையில்....: திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் உடுமலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.
   உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்தினர். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், மடத்துக்குளம் தொகுதி செயலாளர் வழக்குரைஞர் கே.மனோகரன், வழக்குரைஞர் கே.ராமகிருஷ்ணன், அமைப்பு சாரா ஓட்டுநர் சங்கத் தலைவர் ஏ.ஹக்கீம், போக்குவரத்து தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி அந்தப் பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
  உடுமலை ஒன்றியத்தில் முக்கோணம், வாளவாடி, தும்பலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். ஒன்றியச் செயலாளர் கே.ஆறுச்சாமி, தும்பலப்பட்டி கே.மனோகரன், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பல்லடத்தில்...: அதிமுக (அம்மா) அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு நகரச் செயலாளர் ஏ.துரைகண்ணன் தலைமையில் நிர்வாகிகள் டி.யவனகதிரவன், ரவிசந்திரன், காதர்பாட்ஷா, அழகர்சாமி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
பெருமாநல்லூரில்...: மறைந்த  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் பெருமாநல்லூர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதில்,  ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ஆர்.சாமிநாதன், பேரவை ஒன்றியச் செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி,  ஊராட்சிகளின் முன்னாள்  தலைவர்கள் முத்துரத்தினம், ஸ்ரீதேவி பழனிசாமி, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com