அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தை பாஜகவினர் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி முதலாவது வார்டுக்கு உள்பட்ட கண்ணன் கோயில் வீதியில் சில நாள்களுக்கு முன்பு புதிகாகக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் உடடினயாக அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் அப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், முதலாம் மண்டலப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி பாஜக சார்பில் மண்டல அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில், கண்ணன் கோயில் வீதியைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் மண்டல அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவைச் சேர்ந்த சிலர், தரையில் பாயில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி உதவி ஆணையர் வாசுகுமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அவரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையர், அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள், பெண்கள் கலைந்து சென்றனர்.