வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு பணப் பரிவர்த்தனை முறை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விளைபொருள்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு இதுவரை நேரடியாகப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. இதனால், விவசாயிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுபோன்ற சிரமத்தைப் போக்கும் வகையிலும், ஒளிவுமறைவற்ற வரவு, செலவுக்காகவும் இ-பேமண்ட் எனப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னனு பணப் பரிவர்த்தனை முறையை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் தொடக்கிவைத்தார்.
இங்கு, பொருள்களை வாங்கும் வியாபாரிகள், அதற்கான பணத்தை விற்பனைக்கூடத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பின்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு விற்பனைக் கூடத்திலிருந்தே ஆன்லைன் மூலம் உடனடியாகப் பணம் செலுத்தப்படும். எனவே, விவசாயிகள் தங்களின் வங்கிக் கணக்கு எண் விவரத்தை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிமேல், நேரடியாகப் பணப் பட்டுவாடா செய்யப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்துக்கு 143 மூட்டை தேங்காய் பருப்புகள் கொண்டுவரப்பட்டிருந்தன. மொத்த எடை 7,140 கிலோ. அதிகபட்சமாக கிலோ ரூ.131.15க்கும், குறைந்தபட்சமாக ரூ. 60.95க்கும் என ஏலம்போனது. விற்பனைத் தொகை ரூ. 8.60 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதில், முதல் தடவையாக ரூ. 4.26 லட்சம் மின்னணு பணப் பரிவர்த்தனை முறையில் வழங்கப்பட்டது.